புயலுக்கு மத்தியில் பூத்த மலர்கள்.. பைபர்ஜாய்-க்கு நடுவே.. கடலோர மாவட்டத்தில் பிறந்த 274 குழந்தைகள்
அகமதாபாத்: பைபர்ஜாய் புயல் இன்று கரையைக் கடக்க இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணிகள் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதில் அங்கு தங்கியிருந்த கர்ப்பிணி பெண்களில் 274 பேருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளதாக கட்ச் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த 5 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக உருமாறியது. 'பைபர்ஜாய்' என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ந்தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது. மிக தீவிர புயலான இந்த பைபர்ஜாய் புயல் இன்று மாலை 6.30 மணியளவில் கரையைக் கடக்க தொடங்கியது.

புயலானது குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையைக் கடக்க தொடங்கியதில் இருந்து பலத்த காற்று வீசி வருகிறது. புயல் முழுவதுமாக கரையைக் கடக்க நள்ளிரவை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக புயலின் கண் பகுதி கரையை நெருங்கி வருகிறது.
கண் பகுதி கரையைக் கடந்ததும் புயல் ஓய்ந்து விட்டதாக மக்கள் எண்ணக் கூடாது எனவும் கடைசியாக வால்பகுதி கரையக் கடக்கும் வரை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் காரணமாக குஜராத் கடற்கரையை ஒட்டியுள்ள துவராகா, ஒகா, நலியா, பூஜ், போர்பந்தர் மற்றும் காண்ட்லா ஆகிய பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. புயல் முன்னெச்சரிக்கை காரணமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பைபர்ஜாய் புயல் காரணமாக கடலோர பகுதிகளில் வசித்த கர்ப்பிணி பெண்கள் 270 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில், இந்த கர்ப்பிணி பெண்களுக்கு இன்று அழகான குழந்தைகளை பெற்றொடுத்ததாக கட்ச் மாவட்ட ஆட்சியர் அமித் ஆரோரா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "மருத்துவமனையில் நிறை மாத கர்ப்பணிகள் 512 பேரை அனுமதித்துள்ளோம். அவர்களில் 274 பேருக்கு குழந்தைகள் பிறந்தன. புயல் கரையக் கடக்க இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு முன்பே இந்த கர்ப்பிணி பெண்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டோம்" என்றார்.












Click it and Unblock the Notifications