திருப்பதி: செம்மரக்கடத்தல் கும்பலைச்சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை
திருப்பதி: திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் வியாழக்கிழமை போலீஸா ருக்கும், செம்மர கடத்தல் கும்பலுக்குமிடையே பயங்கர மோதல் நடைபெற்றது. இதில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் போலீஸாரும் காயமடைந்தனர்.
சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த செம்மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், சேஷாசலம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வன அதிகாரிகள், ஸ்ரீதர், டேவிட் ஆகியோரை செம்மர கடத்தல் கும்பல் வெட்டி கொன்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
சேஷாசலம் வனப்பகுதியில், 24 மணி நேரமும் மலையேறும் பயிற்சி பெற்ற போலீஸார் பாகராபேட்டை, சின்னகொட்டிகள்ளு, பீலேரு போன்ற மலைப்பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 4 நாட்களாக இந்த வனப்பகுதியில், போலீஸாருக்கும் செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. கோடிக்கணக்கில் செம்மரங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணியளவில் திருமலையில் உள்ள சிலாதோரணம் என்ற இடத்திலிருந்து 15 கி.மீ.தூரத்தில் உள்ள நாகபட்லா என்ற பகுதியில் செம்மரக் கடத்தல் கும்பல், மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட 80 பேர் கொண்ட போலீஸ் படையினர், கடத்தல்காரர்களை சரணடையுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதை ஏற்க மறுத்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், போலீஸார் மீது கற்களாலும், கோடாலியாலும் சரமாரியாக தாக்கினர். இதில் 5 போலீஸார் காயமடைந்தனர்.
இவர்களை சமாளிக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே குண்டுகள் பாய்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாயினர். மேலும் இருவர் குண்டுகள் பாய்ந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சேஷாசலம் வனப்பகுதில் நூற்றுக்கும் மேற்பட்ட கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் பதுங்கி இருக்கலாம் என்பதால், தொடர்ந்து போலீஸார் தேடி வருகின்றனர்.
இதனிடையே, கடந்த 2003-ல் அலிபிரி மலைவழிப்பாதையில் வெடிகுண்டு வைத்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை கொல்ல சதி நடந்த சம்பவத்தில், செம்மர கடத்தல் தொழில் புரியும் கங்கி ரெட்டி என்பவர் முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது.
இவரால் தனது உயிருக்கு ஆபத்து என சீமாந்திராவின் முதல்வராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்ததால், கங்கி ரெட்டியை தற்போது போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதன் காரணமாக, தற்போது செம்மரக் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க போலீஸாருக்கு மாநில ஆளுநர் நரசிம்மன் உத்தரவிட்டுள்ளார். ஆதலால், ராயலசீமா போலிஸ் ஐ.ஜி. நவீன்சந்த் தலை மையில் ஆயுதப்படை போலீஸார், சேஷாசலம் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications