மீண்டும் பதற்றம்.. மணிப்பூரில் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேர்.. பயங்கரவாத குழு அட்டூழியம்!
இம்பால்: மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் இன்று காலை நடந்த வன்முறையில் குக்கி-ஸோ பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் குக்கி- மெய்தி ஆகிய இரு சமூகங்களிடையே கடந்த மே மாதம் முதல் கலவரம் நீடித்து வருகிறது. 4 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 170 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

பிரதமர் மோடி நாடாளுமன்ற மக்களவையிலும், சுதந்திர தின விழா உரையின்போதும் மணிப்பூர் கலவரம் குறித்து பேசினார். அங்கு தற்போது அமைதி நிலவி வருவதாக தெரிவித்தார். மணிப்பூர் மாநில முதல்வரும் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் மணிப்பூரில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குக்கி-ஸோ சமூகத்தைச் சேர்ந்த மூன்று பழங்குடியின மக்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்பால் மேற்கு மற்றும் காங்போக்பி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள இரெங் மற்றும் கரம் பகுதிகளுக்கு இடையே உள்ள கிராம மக்கள் மீது வாகனத்தில் வந்து சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி, மணிப்பூரில் உள்ள தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள பல்லேல் பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், இன்று மீண்டும் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்திருப்பது மணிப்பூரில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications