காங்கிரசுக்கு எதிராக களமாடும் கெஜ்ரிவால் கட்சி! சத்தீஸ்கரில் பூரிப்பில் பாஜக! "இந்தியா" கூட்டணி கதி?
ராய்ப்பூர்: "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதே "இந்தியா" கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆத்மி கட்சி அக்கட்சிக்கு எதிராக சவாலாக பிரசாரம் செய்து வருகிறது. இது வெற்றி மிதப்பில் இருக்கும் காங்கிரஸுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியும் சத்தீஸ்கர் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

"இந்தியா" கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பின்னும் கடும் சந்தேகங்களுக்கு மத்தியில்தான் ஆம் ஆத்மி இடம்பெற்றது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில தேர்தல் களத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆம் ஆத்மி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் மான் உள்ளிட்டோர் சத்தீஸ்கரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர். முதல் தேர்தல் பிரசார கூட்டத்திலேயே, ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் மாதந்தோறும் இலவசம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவின் கடந்த கால ஆட்சியால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். கடந்த தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 15 இடங்கள்தான் கிடைத்தன. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 75 இடங்களில் வெல்வோம் என்ற மிதப்பில் இருக்கிறது காங்கிரஸ்.
இந்நிலையில் காங்கிரஸ் வெற்றிக்கு குழிதோண்டும் வகையில் ஆம் ஆத்மி களமிறங்கி உள்ளது. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் காங்கிரஸுக்கு போய்க் கொண்டிருக்கிறது. இப்போது இதனை சிதறடிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி களமிறங்கி இருக்கிறது. தங்களுக்கு எதிரான வாக்குகள் சிதறுவது பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைத் தரக் கூடும் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறதாம் பாஜக.
அதேநேரத்தில் "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றுக் கொண்டே காங்கிரஸும் ஆம் ஆத்மியும் இப்படி தேர்தல்களில் முட்டிக் கொண்டு நிற்பதை அடுத்த மும்பை கூட்டத்தில் பேச வேண்டும் என அக்கூட்டணியின் இதர கட்சித் தலைவர்கள் அழுத்தம் தர தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications