பதவியேற்கவே இல்லை- உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமிக்கு எதிராக 35 பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி?
டேராடூன்: உத்தரகாண்ட் புதிய முதல்வராக புஷ்கர்சிங் தாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக 35 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் முதல்வராக இருந்த தீரத்சிங், செப்டம்பருக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்கிற நிலை. இதனால் தீரத்சிங், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

முதல்வராக புஷ்கர்சிங்
இதனையடுத்து டேராடூனில் நடைபெற்ற பா.ஜ.க.எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புஷ்கர்சிங் தாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டது. இதுவரை அமைச்சர் பதவி கூட வகிக்காத புஷ்கர்சிங் தாமி, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஆர்.எஸ்.எஸ். ஊழியர்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் நீண்டகாலம் செயல்பட்டவர் என்பதாலேயே புஷகர்சிங் தாமி, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் புஷ்கர்சிங் தாமியை முதல்வராக தேர்வு செய்ததற்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜகவில் அதிருப்தி
சீனியர் தலைவர்கள், சீனியர் அமைச்சர்கள் என பலரும் முதல்வர் ரேஸில் இருந்தனர். அப்படி இருக்கும் போது 45 வயதான புஷ்கர்சிங் தாமியை எப்படி முதல்வராக தேர்வு செய்யலாம்? என்பது அதிருப்தியாளர்களின் கேள்வி. தற்போதைய நிலையில் 35 எம்.எல்.ஏக்கள், புதிய முதல்வர் புஷ்கர்சிங்குக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார்களாம்.

டெல்லியில் முகாமா?
அத்துடன் இவர்கள் டெல்லிக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது; ஆனால் பாஜக மூத்த தலைவர்கள் சிலரோ, புஷ்கர்சிங் தாமிக்கு எதிராக எந்த ஒரு சலசலப்புமே இல்லை; பொய்யான தகவல்களை வேண்டும் என்றே பரப்பி வருகின்றனர் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications