ரூ.37,000 கள்ள நோட்டுகள்.. பழைய நோட்டு போல டெபாசிட் செய்ய வந்த பெண் கைது
கள்ள நோட்டுகளை பழைய 500 மற்றும் 1000 ரூபாயை மாற்றுவது போல வங்கியில் டெபாசிட் செய்ய வந்த பெண் போலீசாரிடம் சிக்கினார்.
திருவனந்தபுரம்: கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை சாக்காக வைத்துக் கொண்டு தன்னிடம் இருந்த பழைய நோட்டுகளை
வங்கியில் செலுத்திவிடலாம் என்று முயற்சி செய்த பெண் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மரியம்மா. இவர் தன்னிடம் இருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கொன்டோட்டி என்ற பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு சென்றுள்ளார். அங்கு வழக்கம் போல தான் கொண்டு வந்திருந்த 49 ஆயிரத்து 500 ரூபாயை டெபாசிட்டாக செலுத்தியுள்ளார். பணத்தை ஆய்வு செய்த வங்கி ஊழியர் அதில் கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மரியம்மா கொடுத்த 49,500 ரூபாயில் 37 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, வங்கி ஊழியர்கள் , அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தனது பிள்ளைகள் வெளியூரில் வேலை செய்து வருவதாகவும், அவர்கள் அனுப்பிய பணம் இது என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் மரியம்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும், மக்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியது.
இதனையடுத்து, கடந்த 10ம் தேதியில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வங்கிகளில் குவிந்து தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இந்த நிலையில்தான் மரியம்மா தன்னிடம் இருந்த கள்ள நோட்டுகளை வங்கியில் செலுத்த முயன்ற போது பிடிபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications