ஒடிஷாவில் மீண்டும் ஷாக்.. மேலும் ஒரு ரஷ்யா நாட்டவர் மர்ம மரணம்- சரக்கு கப்பலில் சடலமாக மீட்பு!
புவனேஸ்வர்: ஒடிஷாவில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த மேலும் ஒருவர் சரக்கு கப்பலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவில் கடந்த 2 வாரங்களில் ரஷ்யாவை சேர்ந்த 3-வது நபர் மர்மமாக உயிரிழந்துள்ளார்.
Recommended Video
ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் பாவெல் ஆண்டோவ், அவரது நண்பரும் எம்பியுமான விளாமிர் புடானோவ் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்திருந்தனர். ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்தில் விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர். ராயகடா மாவட்டம் மலைகள் சூழ்ந்த பிரதேசம். பழங்குடி மக்கள் பகுதியாகும்.
ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்துக்கு வெளிநாட்டவர் ஏராளமாக வந்து செல்வது வழக்கம். ராயகடா, ஒடிஷாவின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆகையால் பாவெல் ஆண்டோவ், விளாமிர் புடானோவ் உள்ளிட்டோர் ரஷ்யாவில் இருந்து ராயகடாவில் வந்து தங்கி இருந்தனர். பாவெல் ஆண்டோவ், ரஷ்யா அதிபர் புதினை கடுமையாக விமர்சிக்கக் கூடியவர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தை கடுமையாக எதிர்த்தவர்.
ராயகடாவில் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து பாவெல் ஆண்டோவ் கீழே விழுந்து உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த பாவெல் ஆண்டோவ் சடலம் மீட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரது நண்பரும் எம்பியுமான விளாமிர் புடானோவ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ரஷ்யா நாட்டவர்கள் அதுவும் அதிபர் புதினை கடுமையாக எதிர்க்கக் கூடியவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில் மர்மமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த மரணங்கள் இயற்கையானவை; இதில் சதி ஏதும் இல்லை என ரஷ்யா, இந்திய தரப்பில் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒடிஷா போலீசார் விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யாவை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் சரக்கு கப்பலில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருந்தது தெரியவந்துள்ளது. ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலின் தலைமை பொறியாளரே மர்மமாக இறந்து கிடந்தார். மிலாய்கோவ் செர்ஜி என்ற அந்த பொறியியலாளரின் சடலம் மீட்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.