ஒரே ஒரு மரத்திற்கு துப்பாக்கி ஏந்திய.. 4 போலீஸ் பாதுகாப்பு.. ரூ. 12 லட்சம் செலவு.. எதுக்கு தெரியுமா?
போபால்: மத்திய பிரதேசத்தின் ரெய்சன் நகரில் இருக்கும் மரம் ஒன்றிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.
மனிதர்களுக்கு இசட், இசட் ப்ளஸ் பாதுகாப்பு போன்ற பாதுகாப்புகளை கொடுத்து நாம் பார்த்து இருப்போம். பிரபலமாக இருக்கும் பலருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு இருக்கும்.
ஆனால் மரம் ஒன்றிற்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருவது தெரியுமா? ஆம் மத்திய பிரதேசத்தில் உள்ள பகுதி ஒன்றில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
என்ன மரம்
ரெய்சன் நகரில் புகழ் பெற்ற சாஞ்சி ஸ்தூபா என்ற பகுதி உள்ளது. இங்கே இருக்கும் மரத்திற்குத்தான் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 24 மணி நேரமும் ஒரு நிமிடம் இடைவெளி இன்றி போலீசார் இங்கே பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள். அதுவும் சாதாரண பாதுகாப்பு கிடையாது. துப்பாக்கி ஏந்தி சுற்றி நின்று பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அதெல்லாம் சரி பாஸ்.. அப்படி இந்த மரத்தில் என்னதான் இருக்கிறது? உள்ளே எதாவது தங்கம்.. வைரம் இருக்கிறதா என்று கேட்கலாம். ஆனால் உள்ளே இருப்பது அதுக்கும் மேலே!
ஏன் முக்கியம்?
புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் அடைந்தார் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மரம் ஒன்றின் கீழ் நீண்ட தியானத்தில் இருந்த போதுதான் ஞானம் அடைந்தார். அந்த மரம் இருந்ததாக நம்பப்படும் பகுதியில் கிமு 250ல் அசோக சக்ரவர்த்தி கோவில் ஒன்றை எழுப்பி அந்த மரத்தை பாதுகாத்தும் வந்தார். இந்த மரத்தின் கிளையை அதன்பின் இலங்கையில் புத்தம் பரவிய சமயத்தில் கொண்டு சென்றனர். மன்னன் தீசன் என்பவர் அசோக சக்கரவர்த்தியிடம் இருந்து இதன் கிளையை பெற்றார். அங்கே மரமும் நட்டார். அந்த மரம் பெரிதாக வளர்ந்தது. இப்போதும் அந்த மரம் அனுராதபுரம் பகுதியில் உள்ளது.
இந்தியா
இன்னொரு பக்கம் மத்திய பிரதேசத்தில் இருக்கும் மரம் விழுந்துவிட்ட நிலையில், இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே இலங்கையில் உள்ள அந்த மரத்தின் கிளையை மீண்டும் மத்திய பிரதேசம் கொண்டு வந்தார். 2012-ம் ஆண்டில் இந்த சம்பவம் நடந்தது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் பெரிய விழா எடுத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இப்போது அந்த மரம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. புத்தர் ஞானம் பெற்ற மரத்தின் வழி தோன்றலாக இது கருதப்படுகிறது.
செலவு
இதையடுத்தே அந்த மரத்திற்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 24 மணி நேரமும் ஒரு நிமிடம் இடைவெளி இன்றி போலீசார் இங்கே பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள். துப்பாக்கி ஏந்திய தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 4 போலீசார் ஷிப்ட் முறை 6 மணி என்று கணக்கில் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இந்த மரத்தை பாதுகாக்க மட்டும் ஆண்டுக்கு 12 லட்சம் செலவு செய்யப்படுகிறது. அதாவது மரத்திற்கு தண்ணீர், பூச்சி மருந்து, இரவில் பாதுகாப்பு, சுத்தம் செய்யப்பட்ட இடம் , கரைப்பானுக்கு எதிரான மருந்து என்று பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன. இதற்காக இவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்படுகிறது.