கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்தில் சம்பவம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சாவு
காந்திநகர்: 350 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த நான்குவயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டம் கோகுல்பூர் கிராமத்தை சேர்ந்த நான்குவயது சிறுவன் விஜய் வாசவா. இன்று காலை வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில், திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராமல் விழுந்துள்ளான்.
தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர் விரைந்து வந்து சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தனர். கிணற்றுக்குள் ஆய்வு செய்து பார்த்தில் 87வது அடியில் சிறுவன் சிக்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக பிராணவாயு செலுத்தப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. நான்கு மணி நேர மீட்பு பணிகளுக்கு பிறகு உயிரிழந்த நிலையில் சிறுவன் மீட்கப்பட்டான்.
கர்நாடகாவின் பிஜாப்பூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4வயது சிறுமி, 50 மணி நேர மீட்பு பணிகளுக்கு பிறகு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆழ்துளை கிணறுகளை திறந்து வைக்க கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசுகளால் இயலவில்லை.