42 மத்திய அமைச்சர்கள் வருகிறார்கள்.. தமிழிசை "எச்சரிக்கை"!
டெல்லி: தமிழகத்தில் வருகிற சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக 42 மத்திய அமைச்சர்கள் மாநிலத்திற்கு விஜயம் செய்து கட்சியைப் பலப்படுத்தவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக 42 மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அவர்கள் செல்லவுள்ளனர். மக்களிடம் அவர்கள் கலந்துரையாடுவார்கள். மக்கள் தங்களது புகார்களை அமைச்சர்களிடம் தரலாம்.
மாவட்டந்தோறும் இந்த மந்திரி - மக்கள் சந்திப்பு நடைபெறும். மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கான திட்டம் இது. மாவட்ட வாரியான பிரச்சினைகள் குறித்து மக்களிடம் நேரடியாக அமைச்சர்கள் கேட்டறிய இது வாய்ப்பளிக்கும். உதாரணத்திற்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது மாவட்ட பிரச்சினை குறித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் பேச விரும்புகின்றனர். எனவே ஜவுளித்துறை அமைச்சர் சேலத்திற்கு விரைவில் வருவார்.
தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்தும், அதற்குத் தீர்வு காண்பது குறித்தும் மத்திய அமைச்சர்கள் ஆர்வமாக உள்ளனர். எனவேதான் அமைச்சர்கள் தமிழகத்திற்கு வர விரும்புகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகதான் மாற்று கட்சியாகும். எனவே அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார் தமிழிசை.