பீகாரில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் அலறியடித்து ஓட்டம்
பாட்னா: பீகாரில் வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களுக்கு ஓடி வந்தனர்.
நேபாள் மற்றும் இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள பீகார் மாவட்டங்களை மையமாகக் கொண்டு வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.
பாட்னா, தர்பங்கா, அராரியா, முங்கர், சுபுவால் மற்றும் மதுபானி உள்ளிட்ட இடங்களில் இரவு 9.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர்.
நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். முன்பும் கூட அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது அது பீகாரின் தர்பங்கா, மதுபானி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது.
இது குறித்து பீகார் மாநில வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஏ.கே. சென் கூறுகையில்,
நிலநடுக்கத்தால் பீகாரில் எந்தவித சேதமும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. மக்கள் தான் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர் என்றார்.