மேகாலயாவில் சூனியம் வைத்ததாக சித்ரவதை செய்து 5 பேர் கொலை - போலீஸ் விசாரணை
ஷில்லாங்: மேகாலயாவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த ஐந்து பேரின் சடலங்கள் ஒரே இடத்தில் புதைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அவர்கள் சூனியம் வைத்ததாகச் சித்ரவதை செய்து கொலை செய்யப் பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகிறது.
மேகாலயாவின் மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் மிரிக்ரே. இங்குள்ள இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், கடந்த மாதம் ஒரே நேரத்தில் திடீரென மாயமானார்கள்.
இதுகுறித்து அவர்களின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக அக்கிராமத்தை சேர்ந்த சுமார் 60 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காணாமல் போனவர்கள் கொலை செய்யப்பட்டு, புதைக்கப் பட்ட இடம் கண்டு பிடிக்கப் பட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட், இரண்டு டாக்டர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் பள்ளி ஆசிரியர் மற்றும் வயதான பெண் ஒருவரும் அடக்கம். சடலமாக மீட்கப்பட்ட 5 பேரின் கைகளும் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்ததாகவும், அவர்களின் உடல்களில் கடுமையான காயங்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால், சூனியம் வைத்ததாக கூறி சித்ரவதை செய்து அவர்களை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்துள்ள போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications