நீங்களே ரேப் பண்ணுங்க.. நீங்களே அபார்ஷனும் பண்ணுங்க.. என்ன மனுஷங்கடா நீங்க?
புலந்த்சாகர்: உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகரில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியும் அவரது குடும்பத்தினரும், சிறுமியின் வயிற்றில் வளர்ந்த 5 மாதக் கருவை கட்டாயப்படுத்தி கலைத்து கொடூரம் செய்துள்ளனர்.
புலந்த்சாகரைச் சேர்ந்த 14 வயது சிறுமியை 5 மாதங்களுக்கு முன், அதே மாவட்டத்தில் உள்ள பாய்பூரா கிராமத்தைச் சேர்ந்த முகமது யூனுஷ் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வெளியில் வாயைத் திறக்கக் கூடாது என்றும் சிறுமியை மிரட்டிவிட்டும் சென்றிருக்கிறார்.
சம்பவம் நடந்து 5 மாதங்கள் ஆன நிலையில், சிறுமியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு மிக மோசமாக பாதிப்படைந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்தத் தகவலை தெரிந்து கொண்ட பாலியல் பலாத்காரம் செய்தவரின் குடும்பத்தினர், 1000 ரூபாய் பணத்தைக் கொடுத்து கருக்கலைப்பு செய்ய சிறுமியைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து கருக்கலைப்பையும் செய்து கொண்டார் அந்த குட்டிப் பெண்.
இந்த கொடூர சம்பவம் குறித்த தகவலை அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவமனையைச் சேர்ந்த நர்ஸ் மற்றும் நிர்வாகத்தினரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.