கிராமத்தில் மொத்தம் 800 பேர்.. 50 பேர் அடுத்தடுத்து மரணம்! அதிர வைக்கும் சத்தீஸ்கர் “மர்மம்”
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் உள்ள குக்கிராமம் ஒன்றில் குறுகிய கால இடைவெளியில் 50 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த மர்மம் அறியாமல் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ளது ரெக்த்கட்டா கிராமம். இதில் சுமார் 800 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் 50 முதல் 52 பேர் எந்த காரணமும் தெரியாமல் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்து இருக்கிறார்கள். குறிப்பாக கடந்த 6 மாதங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
தங்கள் உறவினர்களின் மரணத்துக்கான காரணம் தெரியாமல் குடும்பத்தினர் விழிபிதுங்கி நிற்கின்றனர். உயிரிழந்தவர்களின் கால் மற்றும் மூட்டு பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டதாகவும், குமட்டல் பிரச்சனை அதிகம் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இதுவரை அவர்களை தாக்கிய நோய் எது என்று கண்டறியப்படவில்லை.
8 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. உங்க ஊர் இருக்கா செக் பண்ணுங்க
சுகாதாரத்துறை
இதுகுறித்த தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். கிராமத்தில் பரவிய நோய் என்ன? எப்படி பரவியது என்பதை கண்டறிய அப்பகுதியில் உள்ள மண், தண்ணீர் ஆகியவற்றின் மாதிரிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து சென்று இருக்கின்றனர். ரெகத்கட்டா கிராமத்தில் 50 பேரின் உயிரை பறித்த நோய் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடாமல் தடுக்க சுற்றுவட்டார கிராமங்களில் உச்சக்கட்ட கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஒடிசா, தெலுங்கானா எல்லை
ரெகத்கட்டா கிராமம் சுக்மாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மிகவும் பின் தங்கிய மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகும். ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநில எல்லைகளை ஒட்டி இந்த கிராமம் அமைந்து இருப்பதால் மற்ற மாநிலங்களுக்கும் இது பரவிவிடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
41 பேர் பாதிப்பு
இப்பகுதிகளில் சுகாதார முகாம்களை நடத்த நடவடிக்கை எடுத்து உள்ளார்கள். கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் உயிரிழந்தவர்களின் விபரங்களை சேகரிப்பதிலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.இதேபோன்ற அறிகுறிகளுடன் அவதிப்பட்டு வந்த 41 பேர் சுக்மா மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 14 பேருக்கு சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
தண்ணீரில் புளோரைடு
இதனையடுத்து அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக நாக்பூர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. புளோரைடு மற்றும் இரும்பு தாது பொருட்கள் அதிகம் கலந்த பம்ப் தண்ணீரை அருந்தியதாலேயே பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் சுபாஷ் மிஸ்ரா சந்தேகம் தெரிவிக்கிறார். எனவே பம்ப் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என்று சுக்மா மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.