3 முறை தலாக் கூறும் முறைக்கு எதிரான விண்ணப்பத்தில் 50,000 முஸ்லீம்கள் கையெழுத்து
டெல்லி: முஸ்லீம் ஆண்கள் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாத்தை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஆண்களும், பெண்களும் அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இஸ்லாத்தில் ஆண்கள் தங்கள் மனைவியிடம் மூன்று முறை தலாக், தலாக், தலாக் என்று கூறினால் விவாகரத்து ஆகிவிடும். கம்ப்யூட்டர் காலமாகிவிட்டதால் ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்ஆப், எஸ்.எம்.எஸ். மூலம் எல்லாம் தலாக் கூறுகிறார்கள். இந்த மூன்று முறை தலாக் கூறுவதற்கு முஸ்லீம் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாரதிய முஸ்லீம் மகிளா அந்தோலன்(பிஎம்எம்ஏ) என்ற அமைப்பு மூன்று முறை தலாக் கூறும் முறைக்கு தடை விதிக்க தேசிய மகளிர் ஆணையத்தை வலியுறுத்த முடிவு செய்தது. இதையடுத்து அதற்கான விண்ணப்பத்தில் மக்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது.
மூன்று முறை தலாக் கூறும் முறைக்கு தடை விதிக்கக் கோரும் விண்ணப்பத்தில் இதுவரை சுமார் 50 ஆயிரம் முஸ்லீம் ஆண்களும், பெண்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இது குறித்து பிஎம்எம்ஏ அமைப்பின் துணை நிறுவனர் ஜகியா சோமன் கூறுகையில்,
இந்த விண்ணப்பத்தில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, தமிழகம், தெலுங்கானா, ஒடிஷா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் கையெழுத்து வாங்கும் பணி நடந்து வருகிறது.
இதுவரை 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம் என்றார்.