அமைச்சர் உமாபாரதி உட்பட 53 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்- பதவி இழக்கும் ஆபத்து!
டெல்லி: மத்திய அமைச்சர் உமாபாரதி உட்பட 53 லோக்சபா எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் மீதான வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் எம்.பி. பதவியை பதவி இழக்க நேரிடும்.
லோக்சபாவில் உள்ள 541 எம்.பி.க்கள், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீரமைப்புக்கான அமைப்பு ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் எம்.பி.க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 பாஜக எம்.பிக்கள்
லோக்சபாவில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அமைச்சர் உமாபாரதி
இதில் மத்திய அமைச்சர் உமாபாரதி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் அடங்குவர். இவர்கள் மீது பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சிவசேனா
அதற்கு அடுத்து பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் 5 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திரிணாமுல், காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 4 எம்.பி.க்கள், காங்கிரஸ் கட்சியின் 3 எம்.பிக்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.
அதிமுக
முதல் முறை எம்.பி.யாகி இருக்கும் 23 பேரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களில் அதிமுகவின் 3 எம்.பிக்களும் அடங்குவர். பாஜகவின் 6, சிவசேனாவின் 4 புதிய எம்.பிக்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.
பப்பு யாதவ்
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் பப்பு யாதவ் மீதுதான் 13 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவரைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பிரதாப்சின்ஹா, மார்க்சிஸ் கட்சியின் கருணாகரன், பிஜூ ஜனதா தளத்தின் ததகடா சத்பதி ஆகியோர் மீது தலா 6 வழக்குகள் உள்ளன.