மும்பையில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 6 குழந்தைகள் பலி
மும்பை: மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 6 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.
மும்பையின் கிழக்கு பாந்த்ரா பகுதியில் உள்ள பெஹ்ராம்படாவில் 5 மாடிக் கட்டிடம் ஒன்று இன்று மதியம் இடிந்து அருகிலிருந்த குடிசைப்பகுதியில் சரிந்தது. கட்டிட இடிபாடுகளுக்கிடையே நான்கு முதல் ஐந்து பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் ஐந்து வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு ஆம்புலன்ஸ்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இருந்து இதுவரை ஒரு பெண், இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் மூன்று பேரை காப்பாற்றியதாகவும், 6 பேர் இறந்து விட்டதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து கட்டிடங்கள் நெருக்கமாக இருப்பதால் மீட்புப் பணிகள் மிகுந்த சவாலாக இருக்கிறது என தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.