ராஜ்யசபாவில் 17% எம்.பிகள் மீது கிரிமினல் வழக்கு- 67% பேர் கோடீஸ்வரர்கள்
டெல்லி: ராஜ்யசபாவில் 17% எம்.பிக்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 67% எம்.பிக்கள் கோடீஸ்வரர்களாவர் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ராஜ்யசபாவில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் சபையில் நிரப்பப்படாத இடங்களை தவிர்த்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 38 பேர் கிரிமினஸ் வழக்குகளை எதிர்க்கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதில் 15 பேர் மிகவும் ஆபத்தான கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொண்டுள்ளனர். 227 உறுப்பினர்களை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. எஸ்.பி.எஸ். பாகலுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு உள்ளது. டெல்லி காங்கிரஸ் எம்.பி. பர்வேஸ் ஹாஷ்மிக்கு எதிராக கொடூரமான தாக்குதல் நடத்திய வழக்கு உள்ளது.

பீகார் எம்.பி கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம்
கோடீஸ்வர எம்.பி. பட்டியலில் பீகார் மாநிலம் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மகேந்திர பிரசாத் ரூ. 683.56 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

விஜய் மல்லையாவுக்கு 2வது இடம்
இரண்டாவதாக ரூ. 615.42 கோடி சொத்துடன் சுயட்சை உறுப்பினரான கர்நாடகாவை சேர்ந்த விஜய் மல்லையா உள்ளார்.

3வது இடத்தில் ஜெயா பச்சன்
அவரை அடுத்து உத்தரபிதேச மாநிலம் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ஜெயா பச்சன் 493.86 கோடி சொத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ரூ20 லட்சத்துக்கும் குறைவான சொத்து
9 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 20 லட்சத்திற்கு குறைவாக உள்ளது.

ரூ2.75 லட்சம் மட்டுமே சொத்து
மிகவும் குறைவான சொத்து கொண்டவர்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.பி. அனில் தேவ் ரூ. 2.75 லட்சத்துடன் முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து மேற்கு வங்காள மாநிலம் திரிணாமுல் காங்கிராஸ் கட்சியை சேர்ந்த முகமத் நாதிமுல் ரூ. 3.19 லட்சத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மேற்கு வங்க எம்.பி. ரூ. 5.47 லட்சத்துடன் மூன்றாவது பட்டியலில் உள்ளார்.












Click it and Unblock the Notifications