ஷியோக் ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்த ராணுவ வாகனம்.. 7 வீரர்கள் பலி, பலர் படுகாயம்! நடந்தது என்ன
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியப் பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் பரபரப்பாக உள்ள இடம் என்றால் காஷ்மீர் தான். அதிலும் கடந்த சில மாதங்களாகவே அங்குப் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி அதிகரித்து வரும் நிலையில், காஷ்மீரில் ராணுவத்தினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே காஷ்மீரில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்திற்கு உள்ளாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரின் லடாக்கில் உள்ள ஷியோக் ஆற்றின் அருகே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கி உள்ளது.
இந்த விபத்தில் 7 வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மற்ற காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து இந்திய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "26 வீரர்கள் கொண்ட ஒரு குழு பார்தாபூரில் உள்ள முகாமில் இருந்து ஹனிஃபில் என்ற பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது தோய்ஸ் பகுதியில் இருந்து 25 கிமீ தொலைவில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, காலை 9 மணியளவில் வாகனம் எதிர்பாராத விதமாக ஷியோக் ஆற்றில் கவிழ்ந்தது.
சுமார் 50 முதல் 60 அடி ஆழம் கொண்ட இந்த ஆற்றில் வாகனம் கவிழ்ந்ததில் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன. மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, அனைத்து வீரர்களும் பார்த்தபூரில் உள்ள கள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்குச் சிறப்பான மருத்துவச் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு மேற்சிகிச்சை அளிக்க விமானப் படையிடம் இருந்து விமானங்களும் கோரப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே இந்த விபத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "லடாக்கில் பேருந்து விபத்துக்குள்ளானதில் நமது துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்துள்ளோம். என் எண்ணங்கள் எல்லாம் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications