வக்பு வாரியங்களில் இஸ்லாமியர்கள்தான் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் புதிய வக்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட 73 வழக்குகள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் மட்டும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்; இந்து அறக்கட்டளைகளில் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவார்களா? என அதிரடியாக தெரிவித்தது உச்சநீதிமன்றம்.
மத்திய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதனால் புதிய வக்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.

மத்திய அரசின் வக்பு சட்டமானது, இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தில் தலையிடுகிறது; இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சொத்துகளை அரசு கையகப்படுத்த முயற்சிக்கிறது என்பது உள்ளிட்ட காரணங்களுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிபிஐ, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், விசிக, ஆம் ஆத்மி, மஜ்லிஸ் கட்சி, முஸ்லிம் லீக், நடிகர் விஜய்யின் தவெக, ஆர்ஜேடி என அரசியல் கட்சிகள் உட்பட மொத்தம் 73 வழக்குகள், வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது இந்த மனுக்களின் கோரிக்கை.
வக்பு சட்டத்தின் கீழ், வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் உறுப்பினராகலாம், வக்பு சொத்துகள் தருவதற்கு 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றியவராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சரத்துகள் கடுமையாக எதிர்க்கப்படுகின்றன.
மத்திய அரசின் வக்பு சட்டத்தில் தங்களது கருத்துகளையும் கேட்க வேண்டும் என மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், அஸ்ஸாம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரகாண்ட் மாநில அரசுகளும் மனுத் தாக்கல் செய்துள்ளன
மேலும் 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்துக்கு எதிராக 2 இந்துத்துவா அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளன.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய மூவர் பெஞ்ச் இன்று இந்த 73 வழக்குகளையும் விசாரிக்க தொடங்கியது.
உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்
- உச்சநீதிமன்றத்தில் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த கருத்துகள்: 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தை முழுமையாக மாற்றும் வகையில் புதிய வக்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வக்பு சட்டமானது 20 கோடி இஸ்லாமியரின் உரிமையை பறித்துவிட்டது.
- ஒருவர் தமது சொத்தை வக்பாக அறிவிக்க வேண்டும் எனில் இப்போது 5 ஆண்டுகள், இஸ்லாம் மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்கிறது இந்த சட்டம். ஒருவர் இஸ்லாமியரா? இல்லையா? என்பதை ஒரு அரசு எப்படி முடிவு செய்ய முடியும்? தனிநபர் சட்டம் இங்கே பொருந்தாதா?
- ஒரு மாவட்ட ஆட்சியர், எப்படி ஒரு சொத்து வக்பு சொத்தா? இல்லையா? என தீர்மானிக்க முடியும்? வக்பு சொத்துகளுக்கு என வழிமுறைகள் நடைமுறைகள் உள்ளன. அதை பின்பற்றாமல் இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அரசியல் சாசனத்தின் 20-வது பிரிவுக்கு எதிராகவே வக்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
- இஸ்லாமியர்கள் மட்டுமே வக்பு வாரிய நிர்வாகங்களில் உறுப்பினராக முடியும். ஆனால் இப்போது இந்துக்களும் வக்பு கவுன்சில் அல்லது வக்பு வாரியத்தில் உறுப்பினராக முடியும் என்கிறது இந்த சட்டம். இஸ்லாமியர்களின் அடிப்படையான உரிமைகளை இந்த சட்டம் பறிக்கிறது. மத உரிமைகளில் எப்படி ஒரு அரசு தலையிட முடியும்? இவ்வாறு கபில் சிபல் வாதிட்டார்.
உச்சநீதிமன்றம் கறார்
இன்றைய விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக பல கேள்விகளை எழுப்பியது. மேலும், இஸ்லாமியர்களின் வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கறாராக தெரிவித்தது. இந்து கோவில் நிர்வாகம், அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்படுவார்களா? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அத்துடன், வக்பு வாரியத்தில் 2 நீதிபதிகள் இடம் பெறுவதற்கு உச்சநீதிமன்றம் வரவேற்பு தெரிவித்தது. இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications