சட்டிஸ்கர் கருத்தடை முகாமில் விபரீதம் - 8 பெண்கள் மரணம், 15 பேர் சீரியஸ்
பிலாஸ்பூர்: சட்டிஸ்கரில் நடந்த கருத்தடை முகாமில் சிகிச்சைப் பெற்ற 8 பெண்கள் திடீரென மரணமடைந்தனர். 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிலாஸ்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த கருத்தடை சிறப்புமுகாமுக்கு அரசு ஏற்பாடு செய்திரு்ந்தது. சட்டிஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அமர் அகர்வாலின் சொந்த ஊர் பிலாஸ்பூராகும்.
இங்கு நடந்த முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். கருத்தடை அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பல பெண்களுக்கு, திடீரென வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல பெண்கள் மீண்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கென அழைத்து வரப்பட்டனர். அவ்வாறு வந்த பெண்களில் 8 பேர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமில் 5 மணி நேரத்தில் 83 பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர் டாக்டர்கள். எனவே, இதில் அலட்சியம் ஏதேனும் இருந்ததா என்ற புகார் எழுந்துள்ளது. ஒரே நாளில் பலருக்கு அறுவைச் சிகிச்சை செய்த போதிலும் டாக்டர்கள் தரப்பில் அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் 8 பேரின் மரணத்திற்கான காரணத்தை டாக்டர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் கமிட்டியை மாநில அரசு அமைத்துள்ளது.
உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ. 50,000 நிதியுதவியையும் மாநில அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications