பள்ளி, கல்லூரி மாணவர்கள் 828 பேருக்கு ஹெச்ஐவி பாதிப்பு.. காரணம் இதுதான்! திரிபுராவில் ஷாக்
அகர்தலா: திரிபுராவில் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 828 மாணவர்கள் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் மிக கொடிய நோய்களில் ஹெச்ஐவியும் ஒன்றாக இருக்கிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் சுமார் 25 லட்சம் பேர் ஹெச்ஐவி தொற்றுடன் வாழ்கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் இந்த தொற்றின் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் இதன் பாதிப்பு புதிய வடிவத்தை எடுத்திருக்கிறது. அதாவது, திரிபுரா மாநிலத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 828 மாணவர்களுக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கிறது.

திரிபுராவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இது குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் திரிபுரா எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது. இந்த கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களிடையே பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில்தான் 828 மாணவர்களுக்கு ஹெச்ஐவி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் சோகம் என்னவெனில், தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் உயிரிழந்துவிட்டனர் என்பதுதான். மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கு இங்கிருந்து மாணவர்கள் படிக்க சென்றிருக்கிறார்கள். எனவே அவர்களையும் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்ப அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு போதை பழக்கம் இருந்திருக்கிறது. அதாவது, ஒரே ஊசியை பலர் பயன்படுத்தியுள்ளனர். இதனால்தான் தொற்று பரவியிருக்கிறது. எனவே அனைவரையும் கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளோம்" என்று கூறியுள்ளார். ஒரே மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 800க்கும் அதிகமானோர் ஹெச்ஐவி தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹெச்ஐவி பாதிப்பு பாதுகாப்பற்ற உடலுறவு மூலமாக பரவுகிறது. இது தவிர ஒரே ஊசியை பகிர்ந்துக்கொள்வதன் மூலமும், பரிசோதிக்கப்படாத ரத்தத்தை உடலில் ஏற்றுவதன் மூலமும் இந்த தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது. ஹெச்ஐவி வைரஸ் முதலில் மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்குகிறது. வெள்ளை அணுக்களை முற்றிலுமாக இந்த வைரஸ் அழித்துவிடுகிறது. எனவே டிபி, புற்றுநோய் என பல நோய்களை மனிதர்களை தாக்குகின்றன. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனை கடுப்படுத்த சர்வதேச அளவில் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர் வரும் 2030க்குள் இந்த தொற்று பாதிப்பை முழுமையாக குறைக்க யுனிசெஃப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications