குஜராத்தில் திடீரென இடிந்த பாலம்.. ஆற்றுக்குள் அடுத்தடுத்து விழுந்த வாகனங்கள்.. 9 பேர் பலி.. ஷாக்
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் 40 ஆண்டு பழமையான மேம்பாலம் திடீரென்று இடிந்ததில் 2 லாரிகள், 2 வேன்கள் என 4 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. இதில் தண்ணீரில் மூழ்கி 9 பேர் பலியாகி உள்ளனர். இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி நிவாரணத்தை அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் பத்ரா தாலுகாவில் முஜ்பூர் அருகே கம்பீரா மேம்பலாம் உள்ளது. இந்த மேம்பாலம் கடந்த 1985ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஆற்றில் 23 தூண்களுடன் மொத்தம் 900 மீட்டர் நீளத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மஹிசாகர் ஆற்றுக்கு நடுவே வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டத்தை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் தினமும் அனைத்து வகையான வாகனங்களும் சென்று வருகின்றனர். இன்று காலையில் வழக்கம்போல் வாகனங்கள் பாலத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இரண்டு தூண்களுக்கு நடுவே இருந்த பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள் என மொத்தம் 4 வாகனங்கள் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்தன. ஆற்றில் தண்ணீர் செல்வதால் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மீட்பு படையினர் உடனடியாக சென்று மீட்பு பணியை தொடங்கினர். ஆற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்த 5 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். மாறாக 9 பேர் துரதிர்ஷ்டவசமாக இறந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
40 ஆண்டு பழமையான இந்த மேம்பாலத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் திடீரென்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதுபற்றி அறிந்தவுடன் சுகாதாரத்துறை அமைச்சர் ருசிகேஷ் படேல் சம்பவ இடத்துக்கு சென்றார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பாலம் இடிந்து விழுந்தற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாலம் இடிந்து விழுந்தது பற்றி விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தொழில்நுட்ப குழுவினர் இடிந்து விழுந்த பாலத்துக்கு விரைந்து ஆய்வை தொடங்கி உள்ளனர். தற்போது இந்த பாலம் இடிந்து விழுந்த நிலையில் போக்குவரத்து முற்றிலுமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
குஜராத் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமாகும். தற்போது அவர் நமீபியா நாட்டில் உள்ளார். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் பிரதமர் மோடி பாலம் இடிந்து விழுந்து அதில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications