உ.பி.: கோவிலுக்குள் நுழைய முயன்ற 90 வயது தலித் தாத்தா எரித்துக் கொலை
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் கோவிலுக்குள் செல்ல முயன்ற 90 வயது தலித் முதியவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் ஹமிர்புர் மற்றும் ஜலாவ்ன் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ளது பில்காவ்ன் கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மைதானி பாபா கோவிலுக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த சிம்மா(90) என்பவர் தனது மனைவி, மகன் துர்ஜன் மற்றும் சகோதரருடன் கடந்த புதன்கிழமை மாலை சென்றுள்ளார்.
கோவிலுக்குள் நுழைய முயன்ற சிம்மாவை சஞ்சய் திவாரி என்பவர் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்படியும் சிம்மா கோவிலுக்குள் நுழைய முயன்றதால் திவாரி அவரை கோடாரியால் வெட்டினார். மேலும் சிம்மா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் சிம்மா உடல் கருகி பலியானார்.
இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் திவாரியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திவாரி குடிபோதையில் சிம்மாவை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் திவாரி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள திவாரியின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.