குஜராத்தில் 7 மாதத்தில் 93 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்பு: காங்கிரஸ் புகார்
டெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 7 மாதங்களில் 93 ஆயிரம் தொலைபேசிகள் அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் இளம்பெண்ணை வேவு பார்க்க முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரான அமித்ஷா உத்தரவிட்டதாக கூறப்படும் விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி சுதந்திரமான நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்தன. இந்த விவகாரத்தில், அதிருப்தியில் உள்ள குஜராத் அதிகாரிகளை மோடியை தாக்குவதற்கு காங்கிரஸ் கட்சி பயன்படுத்துவதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி பதில் அளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறுகையில், எங்களை தாக்குவதன் மூலம், அருண் ஜெட்லியோ அல்லது மற்றவர்களோ தப்பிக்க முடியாது. குஜராத்தில் நிலவுவது பீதியான நிலைமை.
அங்கு 7 மாதங்களில் 93 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள், அதிகாரபூர்வமின்றி இடைமறித்து கேட்கப்பட்டுள்ளன. இதற்கு நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும். பதில் சொல்லாமல் தப்பிக்க முடியாது.
இப்போது நடந்திருக்கும் விவகாரத்தில், நரேந்திர மோடி நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். சிக்கிக் கொண்டிருக்கிறார் என்றார்.