இந்த நியூஸைப் படிங்க, இனிமே யாரும் பிச்சைக்காரர்களை கிண்டல் செய்யாதீங்க!
பாட்னா: பிச்சைக்காரர்கள் என்றாலே காசு வசூலித்து ஏதாவது டாஸ்மாக் கடையில் குடித்து அழிப்பார்கள் என்றுதான் பெரும்பாலோனோர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பீகார் மாநிலம் கயா நகரில் வசிக்கும் பிச்சைக்காரர்களோ தாங்கள் வசூலிக்கும் பணத்தை மிச்சப்படுத்தி சேமிப்பதற்காக வங்கி ஒன்றை தொடங்கியுள்ளனர்.
பீகார் மாநிலம் கயா நகரில் புகழ் பெற்ற மங்கள கவுரி ஆலயம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் இந்த கோயில் பகுதியில், ஏராளமான பிச்சைக்காரர்கள் வசித்து வருகிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பிச்சை எடுப்பதுதான் அவர்களின் தொழில்.

சமீபத்தில் கயா நகரில் பிச்சை எடுக்கும் சுமார் 60 பிச்சைக்காரர்கள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் பிச்சை எடுப்பவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வங்கி ஒன்று தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதம் பிச்சைக்காரர்களின் வங்கி தொடங்கப்பட்டது.
இந்த வங்கிக்கு "மங்களா வங்கி" என்று பெயரிடப்பட்டது. மங்கள கவுரி ஆலய பகுதியில் அதிக பிச்சைக்காரர்கள் உள்ளதாலும், அந்த கடவுள் பெயராலும் வங்கிக்கு பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக பிச்சைக்காரர்கள் கூறுகிறார்கள்.
இந்த வங்கியின் மானேஜராக ராஜ்குமார் மஞ்ச்கி என்ற பிச்சைக்காரர் பதவி ஏற்றுள்ளார். இவரது மனைவி தேவி பட்டப்படிப்பு படித்துள்ளதால் அவர் கேஷியர் பொறுப்பை வகிக்கிறார். மாலதி தேவி என்ற பிச்சைக்கார பெண், வங்கி செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாப்பிட்டது போக சேமிப்பு
ஒரு வாரம் முழுவதும் எடுக்கும் பிச்சையில், சாப்பிட்டது போக மிச்ச பணத்தை செவ்வாய்கிழமை தோறும் வங்கியில் கட்டி விட வேண்டும் என்று பிச்சைக்காரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கியில் டெபாசிட்
அதன்படி பிச்சைக்காரர்கள் ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.1000 வரை டெபாசிட் செய்து வருகிறார்கள். பிச்சைக்காரர்களால், பிச்சைக்காரர்களுக்காகவே நடத்தப்படும் இந்த வங்கியில் இருந்து, பிச்சைக்காரர்கள் அவசரத்துக்கு கடன் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடனுதவி
சமீபத்தில் ஒரு பிச்சைக்காரர் தன் மனைவி தீக்காயம் அடைந்ததால் ரூ.8 ஆயிரம் கடன் பெற்றார். 2 சதவீதம் முதல் 5 சதவீதம் விரையிலான வட்டித் தொகையில் அந்த கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை
அடுத்தக்கட்டமாக இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள பிச்சைக்காரர்களுக்கு, அரசிடம் மனு செய்து ஆதார் அட்டை பெற்றுக் கொடுக்க உள்ளதாக பிச்சைக்காரர்கள் வங்கி மேலாளர் ராஜ்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications