20 தமிழர் படுகொலை: ஆந்திராவிடம் விளக்கம் கேட்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்!
திருப்பதி: தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக அறிக்கை தர ஆந்திர அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பதி திருமலை வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தலில் ஈடுபட்டதாக நேற்று 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்தால் தமிழக - ஆந்திர எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. ஆந்திர பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் திருப்பதியில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். இதேபோல், ஆந்திர மாநில கவர்னருக்கும் சந்திரபாபு நாயுடு துப்பாக்கிச் சூடு குறித்து போனில் தகவல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர அரசு அறிக்கை ஒன்றை அளிக்கும்படி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதில், தாக்குதல் நடந்த இடம், பலியானவர்கள் விபரம், தாக்குதல் நடத்தியவர்கள் விபரம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங்குடன் போனில் பேசியபிறகு, சந்திரபாபு நாயுடு தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் திருப்பதியில் நடைபெற்ற சம்பவம் பற்றி விவாதிக்கப்பட்டது.