அலைக்கழித்த மருத்துவர்கள்.. அநியாயமாக பறிபோன தமிழரின் உயிர்.. கேரளாவில் பரபரப்பு!
கேரளாவில் காயம்பட்டவரை காப்பாற்றாமல் மருத்துவமனைகள் அலைக்கழித்ததால் தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: காயம்பட்டவரை காப்பாற்றாமல் மருத்துவமனைகள் அலைக்கழித்ததால் தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கேரளமாநிலம் கொல்லத்தில் கூலி வேலை செய்துவந்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் இவர் எந்த ஊரை சார்ந்தவர் என்பது இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று இவர் கொல்லத்தில் நடந்த சாலைவிபத்து ஒன்றில் காயமடைந்து உயிருக்கு போராடினார். அவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி உயிரை காப்பாற்ற ஒவ்வொரு மருத்துவமனைகளாக ஆம்புலன்ஸ் வாகனம் சென்றுள்ளது.
அலைக்கழித்த மருத்துவமனைகள்
5 மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் இல்லை என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அவரது உயிரை காப்பாற்ற எந்த மருத்துவமனை நிர்வாகமும் முயற்சி செய்யவில்லை.
ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார்
சுமார் 5 மணிநேரம் ஆம்புலன்ஸ் வாகனம் அவரது உடலை சுமந்து வீதி..வீதியாக அலைந்ததும்,எரிபொருள் வீணானதுமட்டுமே மிச்சம். கடைசியில் எந்த மருத்துவமனையும் அவரைகாப்பாற்ற முயற்சிக்காததால் அவர் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பொதுமக்கள் சீற்றம்
இதுகுறித்து தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் சம்பந்தபட்ட மெடிசிட்டி மெடிக்கல் காலேஜ், மெரிட்டினா மருத்துவமனை,அச்சியா மெடிக்கல் காலேஜ்,கிங்ஸ் மருத்துவமனை,திருவனந்தபுரம் எஸ்.ஐ.ராயல் ஹாஸ்பிடல் போர்ட் ஆகிய 5 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
மருத்துவமனைகள் மீது வழக்குப்பதிவு
இதைத்தொடர்ந்து கொல்லம் மாநகர காவல்துறையினர் அலைக்கழித்த 5 மருத்துவமனை நிர்வாகங்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். காயம்பட்டவரின் உயிரை காப்பாற்றாமல் அவர் உயிரிழந்த இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.