70 நிமிடங்கள்.. 22 இடங்களில் அடுத்தடுத்து... நாட்டையே அதிர வைத்த 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு
அகமதாபாத்: 2008-ம் ஆண்டு நாட்டையே பேரச்சத்தில் உறைய வைத்தது 56 பேரை பலி கொண்ட அகமதாபாத் தொடர் கொண்டுவெடிப்பு. 70 நிமிடங்களில் 22 இடங்களில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குண்டுகளை வெடிக்கச் செய்து கோரத்தாண்டவமாடியது பயங்கரவாதம். இந்த கொடூர வழக்கில்தான் இன்று அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் 36 பேருக்கு அதிரடியாக தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அதனைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை என அம்மாநிலம் முழுவது மதமோதல்களால் ரத்த களறியாக கிடந்தது. அப்போது குஜராத் முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி.

இந்தியாவின் விடுதலைக்குப் பிந்தைய வரலாற்றில் மிக மோசமான மதமோதல் 2002 குஜராத் வன்முறைகள்தான். இந்த மதமோதல்களுக்கு பழிக்கு பழி இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல்களை அடுத்தடுத்து நடத்தி வந்தனர். இதன் அதிஉச்சங்களில் ஒன்றுதான் 2008-ம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு.
2008 ஜூலை 26 மாலை 6.14: ஊடகங்களுக்கு 14 பக்க இ மெயிலை இந்தியன் முஜாஹிதீன்கள் அனுப்பி வைத்தனர். 2002 சம்பவங்களுக்கு அடுத்த 5 நிமிடத்தில் பழிவாங்கப் போகிறோம் என்பதுதான் அந்த இமெயிலின் சாராம்சம்.
2008 ஜூலை 26 மாலை 6.15; மாலை 6.30; 6.45; 6.48; இரவு 7.00; 7.05; 7.10; 7.36; 7.45; 7.54; 8.00 மணி என அடுத்தடுத்து இடைவிடாமல் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. மொத்தம் 56 பேர் பலியாகினர். 240 பேர் படுகாயமடைந்தனர்
2008 ஜூலை 29 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் சூரத்தில் முதலில் சிக்கினர்.
2008 ஆகஸ்ட் 26 அகமதாபாத் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய 10 தீவிரவாதிகள் கைது என அறிவித்தது குஜராத் போலீஸ்.
2008 முதல் 2016-ம் ஆண்டு வரை இந்த வழக்கில் மொத்தம் 77 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு மாநிலங்களில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர்.
2009-ம் ஆண்டு அகமதாபாத் சிறப்பு நீதிமன்ற விசாரணையை தொடங்கியது. நீதிபதி ஏ.ஆர். படேல், மொத்தம் 35 வழக்குகளை ஒருங்கிணைத்து ஒரே வழக்காக விசாரணை நடத்தினார்.
2009-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் வரை 12 ஆண்டுகள் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை, 500க்கும் அதிகமான சாட்சிகள் என விசாரணை தொடர்ந்தது.
2022 பிப்ரவரி 8: அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் தீர்ப்பு வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 77 பேரில் 28 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சிய 49 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்களில் குஜராத்தை சேர்ந்தவர்கள் 18 பேர்; உ.பி. தீவிரவாதிகள் 10 பேர்; மகாராஷ்டிராவை சேர்ந்த 8 பேரும் அடங்குவர்.
2022 பிப்ரவரி 18: அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சிய 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரே வழக்கில் மிக அதிகமானோருக்கு தூக்கு விதிக்கப்பட்டுள்ளது இது முதல் முறை. முன்னதாக ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனையை விசாரணை நீதிமன்றம் விதித்திருந்தது.












Click it and Unblock the Notifications