பீகார் க்ளைமாக்ஸ்: சட்டசபையில் முதல்வர் மஞ்சி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்!!
பாட்னா: பீகார் சட்டசபையில் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதால் அங்கு பரபரப்பான அரசியல் சூழ்நிலை நீடிக்கிறது. மஞ்சிக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவளிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
லோக்சபா தேர்தலில், ஐக்கிய ஜனதா தள கட்சி அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார். தனது ஆதரவாளரான ஜிதன் ராம் மஞ்சியை முதல்வராக்கினார்.

இந்தாண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், நிதிஷ்குமார் முதல்வராக இருப்பது நல்லது என ஐக்கிய ஜனதா தள கட்சியினர் கருதினர். இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மஞ்சியை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் முதல்வர் பதவியிலிருந்து விலக மஞ்சி மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் ஐக்கிய ஜனதா தள சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சி தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என மாநில ஆளுநர் திரிபாதியை சந்தித்து நிதிஷ்குமார் மனு கொடுத்தார். முதல்வர் மஞ்சியும் ஆளுநரை சந்தித்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக கூறினார்.
மேலும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலையில் 130 எம்.எல்.ஏக்களை நிதிஷ்குமார் நிறுத்தினார். இதனிடையே சட்டசபை ஐக்கிய ஜனதா தளத் தலைவராக நிதிஷ்குமார் செயல்பட பாட்னா உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.
இந்நிலையில் பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி, 20-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் உத்தரவிட்டார்.
டெல்லி சென்றிருந்த மஞ்சி பீகார் திரும்பியதும் அவரது வீட்டில் தனது ஆதரவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். மஞ்சிக்கு ஆதரவு தெரிவித்த 7 அமைச்சர்கள், ஐக்கிய ஐனதா தளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் மஞ்சி பெரும்பான்மையை நிரூபிப்பாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க நிதிஷ் எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவை பெறுவது குறித்து மஞ்சி ஆலோசனை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி, மஞ்சியை ஆதரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்க நிதிஷ்குமார் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களைத் தக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இப்படி இரு தரப்பிலும் எம்.எல்.ஏ.க்களின் பலத்தை காட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பீகாரில் தொடர்ந்து உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications