ஆதார் கார்டு வழக்குகள்.. அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்படுமா? .. 11ம் தேதி தீர்ப்பு
டெல்லி: ஆதார் கார்டு தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது ஆகஸ்ட் 11 அன்று தீர்ப்பளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
"ஆதார் அட்டை தொடர்பான வழக்குகளில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வோ அல்லது மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வோ முடிவெடுக்க முடியாது. எனவே, இது தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும்" என மத்திய அரசு மனு ஒன்றினை தாக்கல் செய்தது.
ஊதியம் பெறுவது, திருமணப் பதிவு, சொத்துகள் பதிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க சில மாநிலங்கள் திட்டமிட்டுள்ளதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த மனுக்கள் உள்பட ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரிய மத்திய அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி, அரசின் கூடுதல் வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். முதலில் வாதாடிய முகுல் ரோத்தகி, "தனிநபர் ரகசியக் காப்புரிமை சுதந்திரம் என்பது அரசியல் சாசன சட்டத்தின் 3 ஆம் பிரிவின்படி அடிப்படை உரிமையாகுமா? ஆம், எனில் தனிநபர் ரகசியக் காப்புரிமைக்கான வரையறைகள் என்ன?' என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் வாதடிய பிங்கி ஆனந்தும் இதே கேள்வியை எழுப்பினார். தனிநபர் ரகசியக் காப்புரிமை என்பது அடிப்படை உரிமையா? என்பதில் அதிகளவு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தெரிவித்த கருத்துக்கும், குறைந்த அளவு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தெரிவித்த கருத்துக்கும் முரண்பாடு இருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து, அந்தக் கேள்விகள் குறித்தும், வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்தும் வருகின்ற செவ்வாய்க்கிழமை அதாவது ஆகஸ்ட் 11 அன்று தீர்ப்பளிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.