100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி
ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பிறகு 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ஆதார் அட்டை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் ஆதார் எண் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. வேலை பார்ப்போரின் எண்ணிக்கையை போலியாக அதிகரித்து பணத்தை அபகரிப்பது, திட்டத்துக்கு வழங்கப்படும் தினக் கூலியை சரிவர கொடுக்காமல் ஏமாற்றுவது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
இதனை தடுக்கும் வகையில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் ஆதார் அட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை அவசியம்
கிராமங்களில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் வரும் 1ம் தேதி முதல் ஆதார் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற வேண்டும்.
அரசு அடையாள அட்டைகளுக்கு அனுமதி
ஆதார் பெறும் வரை ரேசன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, வேலை வாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டை, அரசு உயர் அதிகாரியிடமிருந்து பெறப்படும் சான்றிதழ் ஆகியவை 100 நாள் வேலைத் திட்டத்துக்கு அனுமதிக்கப்படும். ஆதாருக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் அதற்கான பதிவு சீட்டு அல்லது விண்ணப்ப படிவத்தின் நகலை காட்டலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
காஷ்மீரில் கட்டாயமானது
காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆதார் அட்டை இல்லாத பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை பெறுவதற்கான பதிவை உறுதிப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இத்திட்டத்தில் உள்ளோர் ஆதார் எண்ணை பெறுவதில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மத்திய அரசு கூறியிருந்தது.
பணப்பலன் கிடைக்காது
இந்நிலையில் 100 நாள் வேலை திட்டம் உள்ள அனைத்து கிராமங்களிலும் இதனை நடைமுறை படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணப்பலனை அடைய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது,
ரூ.38,500 கோடி ஒதுக்கீடு
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் 38,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 3,800 கோடி அதிகம். இந்த தொகை பயனாளிகளுக்கு சரியாக சென்றடைவதற்காக ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைக்கேட்டை தடுக்க திட்டம்
அரசு அளிக்கும் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி விடக் கூடாது என்பதற்காக ஆதார் கட்டாயம் ஆக்கப்படுகிறது. நேரடி மானியத் திட்டத்தில் வங்கிக் கணக்கு மூலம் பயனாளிகளுக்கு பணம் செலுத்துவதுபோல் 100 நாள் வேலை திட்டத்திலும் பயனாளிகள் முழுமையான பலனை பெறுவது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்துவருகிறது. அதனால்தான் இத்திட்டத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது என கூறப்படுகிறது.