எது குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சியா? செய்தியாளரை அதிரவைத்த பாஜக தொண்டர்! அவமானத்தில் தலைதெறிக்க ஓட்டம்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கல்வி முறையாக இல்லை என்றும், இதற்கு அம்மாநிலத்தில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசுதான் காரணம் எனவும் பாஜக சார்பில் பிரச்சார பணியில் ஈடுபட்டு வந்த அக்கட்சி தொண்டர் பேசிய வீடியோ விவாதப் பொருளாகி உள்ளது.
குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, ஆளும் பாஜக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பாஜக தலைவர்கள் முகாமிட்டு தாமரைக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குஜராத் கூட்டத்தில் சிறுவனை பதம்பார்த்த கற்கள்.. பாஜக மீதுதான் தப்பு! சீறும் ஆம் ஆத்மி
மும்முனைப் போட்டி
கடந்த முறை காங்கிரஸ் பாஜக இடையே இருமுனைப் போட்டியாக நடைபெற்ற குஜராத் தேர்தலில் இம்முறை மும்முனை போட்டி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மூன்று கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார்கள்.
பாஜக பிரச்சாரம்
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் இதில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற அக்கட்சி திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட தேர்தல் அறிக்கையில் பாஜக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்து உள்ளது.
குஜராத்தில் கல்வி
குறிப்பாக இலவச கல்வி வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இலவச கல்வி அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டும் வரும் சூழலில் இப்போது தான் குஜராத்தில் இலவச கல்வியே வழங்குகிறார்களா என தமிழ்நாட்டை சேர்ந்த பலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எழுப்பி இருந்தனர்.
இளைஞர்களை திரட்டிய பாஜக
தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக அதிகளவிலான இளைஞர்களையும் மாணவர்களையும் ஈடுபடுத்தி வருகிறது. பல இடங்களில் இளைஞர்கள் பாஜக கொடியுடன் நின்றி நோட்டீஸ் விநியோகிப்பது, முழக்கங்களை எழுப்புவது, பேரணி செல்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாஜக தொண்டர் பேட்டி
இந்த நிலையில் தனியார் ஆங்கில இணைய ஊடகம் ஒன்று பாஜகவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் மாநிலத்திற்கான தேவைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பி பேட்டியை வெளியிட்டு இருக்கிறது. இது தான் தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
குஜராத்தில் கல்வி சரில்லை
பாஜக கொடியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த இளைஞர், "குஜராத்தில் கல்வி சரியில்லை." என்று கூற செய்தியாளர் அவரிடம், "இதற்கு யார் பொறுப்பு?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த இளைஞர், "யார் பொறுப்பு என்று எனக்கு தெரியவில்லை. இது ஆம் ஆத்மி அரசாங்கம்" என்று தெரிவிக்க செய்தியாளரே அதிர்ச்சியடைந்தார்.
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி
உடனே அந்த செய்தியாளர், "குஜராத்தில் 27 ஆண்டுகளாக பாஜக தானே ஆட்சி செய்து வருகிறது. ஆம் ஆத்மி டெல்லியில் அல்லவா ஆட்சி செய்து வருகிறது." என்று சொன்னவுடன் பாஜக தொண்டர் பதில் சொல்ல முடியாமல் திகைத்து அங்கிருந்து தனது ஆட்களுடன் ஒரே ஓட்டமாக ஓடினார். இதனை ட்விட்டரில் பலரும் பகிர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.