ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை.. சில மணி நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டா லைவில் கண்ணீர்..!
வாரணாசி : இளம் நடிகை அகன்ஷா துபே, தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 வயதான அகன்ஷா துபே ஹோட்டலில் உள்ள ஃபேனில் துணியை பயன்படுத்தி தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.
இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அகான்ஷா துபே வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிரபல நடிகை
போஜ்புரி நடிகை அகன்ஷா துபே, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 25 வயதான நடிகை அகன்ஷா துபே தான் நடிக்கும் போஜ்புரி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக வாரணாசியில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்துள்ளார். நேற்று ஷூட்டிங் முடித்துவிட்டு தனது அறைக்குச் சென்றுள்ளார் அகன்ஷா.

தற்கொலை
இந்நிலையில், இன்று காலை 9 மணி வரை அகன்ஷா துபே வெளியே வராத நிலையில், அவரது மேக்கன் மேன் அகன்ஷா துபே தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்று அழைக்க முயன்றுள்ளார். கதவு திறக்கப்படாததால் ஹோட்டல் ஊழியர்களின் துணையுடன் மாற்றுச் சாவியை வைத்து கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது, அவர் ஃபேனில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார்.

ரீல்ஸ் வீடியோ
நேற்று இரவு கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் அகன்ஷா துபே. அகன்ஷா போஜ்புரி பாடலுக்கு ஆடி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதில் கண்ணாடி முன் நின்று அவர் நடனமாடும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்த அகன்ஷா துபே, கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.

தற்கொலையா?
நடிகை தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, "முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என தெரிய வருகிறது. இருப்பினும் இது தற்கொலையா அல்லது கொலையா என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை காத்திருந்தே சொல்ல முடியும்" என்று தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி
இந்த ஆண்டு காதலர் தினத்தன்று தான், நடிகை அகன்ஷா துபே, சக நடிகர் சமர் சிங்குடன் காதலில் இருப்பதை அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஷூட்டிங்குக்கு சென்ற இடத்தில் நடிகை அகன்ஷா துபே திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம், போஜ்புரி திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications