தாய்லாந்து நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோ கெமிக்கல் துறையில் கால்பதித்த அதானி
காந்தி நகர்: இந்தியாவில் முன்னணி தொழிலதிபராக உள்ள கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் புதிய தொழிலில் கால்பதித்துள்ளது. அதன்படி பெட்ரோ கெமிக்கல்ஸ் சார்ந்த பிசினஸ்க்காக தாய்லாந்து நாட்டின் இந்தோராமா ரிசோர்சஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
நம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் கவுதம் அதானி. இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் நம் நாட்டின் 2வது பெரிய பணக்காரராக உள்ளார். கவுதம் அதானி குழுமத்தை நடத்தி வருகிறார்.

இந்த குழுமம் சார்பில் துறைமுகம், எரிசக்தி, நிலக்கரி உள்பட பல்வேறு துறை சார்ந்த தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கவுதம் அதானி தனது அதானி குழுமம் மூலம் புதிதாக பெட்ரோ கெமிக்கல்ஸ் சார்ந்த தொழிலில் ஈடுபட முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக குஜராத் மாநிலம் முந்த்ராவில் பெட்ரோ கெமிக்கல் கிளஸ்டரை உருவாக்கி உள்ளார்.
இந்த ஆலையின் மொத்த மதிப்பு சுமார் ரூ.35 ஆயிரம் கோடி என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலைக்கு தேவையான மின்சாரம் காற்றாலை மற்றும் சூரிய ஒளியின் மூலம் பூர்த்தி செய்யும் வகையில் ஆலைகள் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் பெட்ரோ கெமிக்கல் தொழிலில் கால்பதிக்கும் வகையில் அதானி குழுமம் தாய்லாந்து நாட்டின் இந்தோராமா ரிசோர்சஸ் லிமிடெட் உடன் கைகோர்த்துள்ளது. இதுதொடர்பாக அதானி குழுமத்தின் ஒன்றான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ள விபிஎல் என்ற வல்லோர் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் (இந்த நிறுவனத்தின் 50 சதவீத பங்கு அதானி குழுமத்திடம் உள்ளது) மற்றும் இந்தோராமா ரிசோர்சஸ் லிமிடெட் உடன் இணைந்து செயல்பட உள்ளது.
இந்த பெட்ரோ கெமிக்கல் துறையில் அதானி குழுமம் மற்றும் இந்தோராமா ரிசோர்சஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் தலா 50 சதவீத பங்குகளை வைத்திருக்கும். விபிஎல் என்பது சுத்திகரிப்பு, பெடே்ரோ கெமிக்கல், கெமிக்கல் பிசினஸ் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இதற்காக அதானி பெட்ரோ கெமிக்கல்ஸ் சார்பில் சுத்திரிகரிப்பு மையங்கள், கெமிக்கல் யூனிட்டுகள், ஹைட்ரஜன் மற்றும் பிற ரசாயனம் சார்ந்த பிளாண்ட்டுகள், யூனிட்டுகள் படிப்படியாக அமைக்கப்பட உள்ளது.
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி முக்கிய தகவலை வெளியிட்ட்டார். அதாவது குஜராத்தில் பெட்ரோ கெமிக்கல் ஆலைக்கான வளாகத்தில் 4 பில்லியன் அமெரிக்கா டாலருக்கும் அதிக முதலீடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அதோடு நிறுவனத்தின் முதற்கட்ட திட்டம் என்பது 2 மில்லியன் டன் பிவிசி (PVC or Polyvinyl Chloride) பிளாண்ட் கொண்டதாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது . அதன்பிறகு பணிகள் தொடங்கியது. 2023 மார்ச்சில் பணி கொஞ்சம் தாமதமான நிலையில் மீண்டும் 2023 ஜுலையில் பணி விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications