7 பேரை விடுவிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்: லோக்சபாவில் அதிமுக, திமுக வலியுறுத்தல்!
டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று லோக்சபாவில் அதிமுக, திமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.
ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து பேரறிவாளன் உட்பட ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை இன்று முடிவு செய்தது.
தமிழக அமைச்சரவை முடிவை சட்டசபையில் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, இதற்கு 3 நாட்களுக்குள் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையெனில் மாநில அரசே தமக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்யும் என்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து லோக்சபாவில் பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.