மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு விவகாரம்: மத்திய அமைச்சர் சுஷ்மாவுடன் அ.தி.மு.க. எம்.பிக்கள் சந்திப்பு
டெல்லி: தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர்.
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்வதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொள்வதும் தொடர் கதையாகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

2011ஆம் ஆண்டு முதல் மொத்தம் 73 கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பதாக முதல்வர் ஜெயலலிதாவே வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் மத்திய அரசு இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
இதனிடையே மீனவர் பிரச்சனை தொடர்பாக தமிழக எம்.பி.க்கள், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை வரும் 31-ந் தேதி சந்திக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று முன் தினம் கூறியிருந்தார். இதன் பின்னர் தமிழக மீனவர்கள் 86 பேரை இலங்கை அரசு விடுதலை செய்ய இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவுத்தார். அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டெல்லியில் நேரில் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா அளித்த கடிதம் சுஷ்மாவிடம் கொடுக்கப்பட்டது.
இலங்கையில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுவிப்பதுடன் அவர்களது படகுகளையும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சுஷ்மாவிடம் அ.தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடிதத்தை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கொடுத்தோம். மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான். இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
பிரதமர் அளித்த உறுதிமொழியின் படி ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்போம் என சுஷ்மா உறுதியளித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications