சுஷ்மாவின் அனல் உரையை கண்கள் "வியர்க்க" பார்த்து பெருமிதம் அடைந்த அத்வானி!
டெல்லி: லோக்சபாவில் இன்று காங்கிரஸைக் குறி வைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடுமையாக வாதம் புரிந்ததைப் பார்த்து அவரது குருவும், மூத்த பாஜக தலைவருமான அத்வானி கண்கள் கலங்க சுஷ்மாவைப் பார்த்து பெருமிதம் அடைந்தார். பேசி முடித்து அமர்ந்த சுஷ்மாவை வாயாரப் பாராட்டவும் அவர் தவறவில்லை.
லோக்சபா இன்று அமளி துமளியாகி விட்டது. காங்கிரஸ் தரப்பில் கடுமையான புகார்களை ஒருபக்கம் அடுக்க, அதற்கு, சுஷ்மா சுவராஜ் அனல் பறக்க பதிலளிக்க பெரும் விவாதக் களமாகி விட்டது லோக்சபா.
சுஷ்மா சுவராஜ், லலித் மோடியின் மனைவிக்கு உதவிய விவகாரத்தில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இன்று அந்த விவகாரத்தில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் விவாதத்திற்கு அனுமதி அளித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கடும் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி விவாதத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு சுஷ்மா சுவராஜ் அனல் பறக்க பதிலளித்தார்.
அவரது பதிலுரையின்போது, மறைந்த ராஜீவ் காந்தி தொடங்கி விடாமல் புகார்களை அடுக்கி காங்கிரஸாரை கொந்தளிக்க வைத்து விட்டார். குறிப்பாக ராஜீவ் காந்தி போபார்ஸ் ஊழல் நாயகன் குவாத்ரோச்சியிடமிருந்து பணம் பெற்றார் என்று அவர் கூறியபோது சோனியா காந்தி கொந்தளித்து போராட்டத்தில் குதித்தார். ஆனாலும் விடாமல் தனது பேச்சைத் தொடர்ந்தார் சுஷ்மா.
அவர் பேசப் பேச அருகில் அமர்ந்திருந்த மூத்த தலைவர் அத்வானி கண்களில் நீர் கட்டிக் கொள்ள மேசையைத் தட்டியபடியும், கைகளை தட்டியபடியும் சுஷ்மாவின் பதிலுரையைப் பாராட்டிக் கொண்டிருந்தார். அவரது முகமே உணர்ச்சிகரமாக இருந்தது. நமது சிஷ்யை என்னா போடு போடுகிறார் என்ற பெருமிதத்துடன் அவர் சுஷ்மா பேச்சைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அரை மணி நேரம் அனல் பறக்கப் பேசிய சுஷ்மா பின்னர் அமர்ந்தபோது, அவரை வெகுவாகப் பாராட்டினார் அத்வானி.