95% அதிமுகவினர் ஓ.பி.எஸ் அணிக்குதான் ஆதரவு.. வழக்கறிஞர்கள் வாதம்
டெல்லி: சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய, இரு அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்கள் மற்றும் கருத்தை நேரில் இன்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இருதரப்பினரும் இன்று காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆரம்பித்தனர்.
முதலில் ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அதிகம்பேரின் ஆதரவு ஓ.பி.எஸ் அணிக்கு இருப்பதாக வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது அவர்கள் கூறுகையில், ஓபிஎஸ் அணியின் சார்பில் 5706 பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரங்கள் அடிப்படையில் பார்த்தால், 43 லட்சம் அதிமுக உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்.
95% அதிமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள் எங்களுக்கே ஆதரவு அளிக்கிறார்கள். எனவே, நாங்களே உண்மையான அதிமுக. அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த மூத்த நிர்வாகி மதுசூதனன்தான். அந்த மதுசூதனனே இரட்டை இலையை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்குத்தான் பரிந்துரைத்துள்ளார்.
இரட்டை இலை எங்களுக்கே வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.