மணிப்பூர் சட்டசபை தேர்தலில் விஸ்வரூபம் எடுக்கும் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டம்!
இம்பால்: மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை விஸ்வரூபமெடுக்க கூடும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
உத்தரப்பிதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விவசாயிகள் நடத்திய ஓராண்டு போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் தேர்தல் களத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை பிரதான அம்சமாக இருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். நாகாலாந்தில் அண்மையில் 14 சுரங்க தொழிலாளர்களை ராணுவம் சுட்டுக் கொன்றது.

அமைச்சரவை
ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டமானது, முன்னெச்சரிக்கை இல்லாமல் தேடுதல், தாக்குதல் நடத்த ராணுவத்தினருக்கு அதிகாரம் தருகிறது. ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களுக்கு இது கேடயமாக இருக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. இதனால் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை தங்களது மாநிலத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று நாகாலாந்து மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.

மணிப்பூரில் விஸ்வரூபம்
இதே கோரிக்கையை மேகாலயா முதல்வரும் வலியுறுத்தி இருந்தார். தேர்தல் நடைபெற உள்ள மணிப்பூரிலும் இந்த கோரிக்கை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கெய்சாம் மேகசந்திரா இது தொடர்பாக கூறுகையில், மாநிலத்தில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை நீக்க பிரதமர் மோடியை முதல்வர் பைரேன் சிங் வலியுறுத்த வேண்டும் என கூறியிருந்தார். மேலும் நாகாலாந்து அமைச்சரவையைப் போல மணிப்பூர் மாநில அமைச்சரவையும் இச்சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

காங். வாக்குறுதி
அத்துடன் 2022 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்தால், மணிப்பூர் மாநிலத்தில் உடனடியாக இந்த சட்டத்தை திரும்பப் பெறுவோம் என்றும் கெய்சாம் மேகசந்திரா வாக்குறுதி அளித்துள்ளார். 2017 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் என்.பி.பி மற்றும் என்.பி.எப் ஆகிய கட்சிகளின் ஆதரவு பாஜக, ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தில் ஏற்கனவே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறது. தற்போது ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்ற முழக்கம் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தொடரும் மணிப்பூர் போராட்டம்
2004-ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் தங்ஜம் மனோரமா என்ற இளம்பெண்ணை ராணுவத்தினர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து சுட்டுக் கொலை செய்த விவகாரம் புயலைக் கிளப்பியது. இச்சம்பவத்தைக் கண்டித்து மணிப்பூரில் பெண்ணிய சமூக செயற்பாட்டாளர்கள் ராணுவத்துக்கு எதிராக நிர்வாணப் போராட்டம் நடத்தி நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தனர். மேலும் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திதான் இரோம் சர்மிளா நீண்டகால உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications