‛‛10 ஆண்டுக்கு பின் கிடைத்த வெற்றி’’.. குஜராத்தில் அதிரடியாக உயர்ந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம்..
காந்தி நகர்: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குஜராத் தேர்தல் முடிவுகள் பெரும் கவனத்திற்கு உள்ளாகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குஜராத்தில் காங்கிரஸ் காலூன்றி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பாஜக இந்த முறை அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகள், இதனை உடைத்தெறிந்தன. கடந்த 2 முறையும் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்த பாஜக, இந்த முறை பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி உதவியுடன் ஆட்சி அமைக்கிறது.

பெரும்பான்மை கிடைக்காததற்கு காரணம் வட மாநிலங்களில் கிடைத்த குறைவான வாக்குகள்தான். குறிப்பாக உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அதேபோல குஜராத்திலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் காலூன்றி இருக்கிறது. குஜராத்தை தங்கள் கோட்டையாக வைத்திருந்த பாஜகவுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து 2014ம் ஆண்டு தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் காங்கிரசுக்கு குஜராத்தில் ஒரே ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 13.59% அதிகரித்தது. மறுபுறம் காங்கிரஸின் வாக்கு வங்கி 9.93% குறைந்தது. சபர்காந்தா மற்றும் ஆனந்த் என இரண்டு தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் காங்கிரஸை குறைந்தபட்சம் 1 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக 5.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோற்கடித்தது.
இதே 2019ம் ஆண்டு தேர்தலை எடுத்துக்கொண்டால், அப்போதும் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. வாக்கு சதவிகிதமும் முன்பை விட இந்த தேர்தலில் 0.90% குறைந்தது. பாஜக வெறித்தனமாக குஜராத்தை தக்க வைத்துக்கொண்டது.
இப்படி இருக்கையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்ற 10 ஆண்டுக்கால வரலாற்றை மாற்றியிருக்கிறது. வாக்கு வங்கியும் 32.55 சதவிகிதத்திலிருந்து 46.62 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. பாஜகவின் வாக்கு வங்கி 4.38% சரிந்திருக்கிறது.
இந்நிலையில் குஜராத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பி குறித்த தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. பனஸ்கந்தா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரசின் ஜெனிபென் தாகூர், பாஜகவின் ரேகா சவுதாரியை 30,406 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இந்த தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தலைமை போதுமான நிதியை தாகூருக்கு வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே தானாகவே சொந்தமாக நிதியை திரட்டி அவர் இந்த தேர்தலை எதிர்கொண்டிருக்கிறார்.
கடந்த 2010ல் காங்கிரஸில் சேர்ந்த ஜெனிபென் தாகூர், 2012ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் வாவ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதுதான் அவரது தேர்தல் பயணத்தின் தொடக்கமாகும். இப்படியாக தற்போது லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications