மேகியைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை... காம்ப்ளானில் நூற்றுக்கணக்கான இறந்த புழுக்கள் கண்டுபிடிப்பு!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் காம்ப்ளான் பாக்கெட்டில் நூற்றுக்கணக்கான இறந்த புழுக்கள் கிடப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு கொடுப்பதற்காக ஆரோக்கிய பானமான காம்ப்ளான் வாங்கியுள்ளார். இந்தாண்டு மார்ச் மாதம் பேக் செய்யப்பட்ட அந்த காம்ப்ளான் பாக்கெட்டில், நூற்றுக்கணக்கான வெள்ளை மற்றும் கருப்பு நிற புழுக்கள் இறந்த நிலையில் இருப்பது கண்டு அப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக அப்பெண்ணின் கணவர் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழகத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த காம்ப்ளான் பாக்கெட் பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த பெண் கூறும் போது 'பல ஆண்டுகளாகவே காம்ப்ளானை பயன்படுத்தி வருகிறோம். நூற்றுக்கணக்கான புழுக்கள் என்பதால் பார்க்க முடிந்தது. குறைவாக இருந்திருந்தால் எப்படி தெரிந்திருக்கும் .மேகி சாப்பிடுவதை நிறுத்தியதை போல காம்ப்ளான் சத்து மாவு சாப்பிடுவதை நிறுத்த போகிறோம்" என தெரிவித்துள்ளார்.
இதேபோல், இம்மாதம் 8ம் தேதி உத்திரப்பிரதேசத்திலேயே வேறொரு மாவட்டத்தில் காம்ப்ளான் பாக்கெட்டில் பூச்சிகள் கண்டுபிடிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, அனுமதிக்கப் பட்டதை விட அதிக அளவு ரசாயனம் கலக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டு, இந்தியாவின் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸிற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், காம்ப்ளானும் இத்தகைய பிரச்சினையில் சிக்கியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.