உ.பி.யில் பயங்கரம்: தலித் பெண்ணை சீரழித்து உடலை துண்டு துண்டாக வெட்டி எரித்த ரவுடி கும்பல்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் ரவுடிகள் சிலர் தலித் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொன்று அவரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எரித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமா. தலித் பெண்ணான அவர் குவாலியர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ககுவா கிராமத்தில் வசித்து வந்தார். 40களில் இருந்த அவர் தனது கணவர் ஹேம்ராஜ் மற்றும் 12 வயது மகளுடன் வசித்து வந்தார். அவர்களின் மகன் ஹேம்ராஜின் பெற்றோருடன் ஜான்சியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமா தனது கணவர், மகளுடன் ஜான்சிக்கு சென்றார். ஆனால் அவர் மட்டும் கிராமத்திற்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் சில ரவுடிகள் ஹேமாவை பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொலை செய்துள்ளனர். மேலும் ஹேமாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர்.
ஊரில் இருந்து திரும்பிய ஹேம்ராஜ் வீடு வெளியே இருந்து பூட்டியிருந்ததால் ஓட்டை பிரித்து உள்ளே சென்றார். அப்போது கட்டிலில் ஹேமாவின் உடல் வெட்டப்பட்டு பாதி எரிந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முயன்றார். அப்போது கிராமத்து தலைவர் மற்றும் சிலர் சேர்ந்து ஹேம்ராஜை போலீசுக்கு போகவிடாமல் தடுத்து ஹேமாவின் பாதி எரிந்த உடலை எரித்தனர்.
இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்த நிலையில் இருந்த ஹேமாவின் உடலை கைப்பற்றினர். சம்பவ இடத்தில் பல ஆணுறைகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications