கால்வாசி கிணறுதான் தாண்டியுள்ளோம்... "தேசிய வங்கிக் கடன்களும் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம்"
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
டெல்லி: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை மட்டும் தளளுபடி செய்தால் போதாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று டெல்லியைக் கலக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாள்களாக விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க எலிக்கறி, பாம்புக் கறி திண்பது, அரை மொட்டை அடித்துக் கொள்வது, பாதி மீசையை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். எனினும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் போராட்டம் நாளுக்கு நாள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கடந்த 2016-இல் தமிழக அரசு ஆணை பிறப்பித்ததை எதிர்த்து அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளித்தது.
சிறு,குறு விவசாயிகள் பெற்ற கடன் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய அய்யாக்கண்ணு தனது மனுவில் கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். எனினும் இது மட்டுமே போதாது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications