பெங்களூர் போலீஸாரின் 10 சீருடைகள் மாயம்.. வாங்கியது யார்?.. மோடி வருகையால் பதட்டம்!

சிவாஜி நகரைச் சேர்ந்த ஒரு டெய்லரிடமிருந்து இந்த சீருடைகளை சிலர் வாங்கிச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் போலீஸார் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே சீருடைகளை வாங்கி் சென்றது யார், எதற்காக வாங்கிச் சென்றனர் என்பது மர்மமாக உள்ளது.
சீருடைகள் காணாமல் போயுள்ளதால் மோடி கூட்டத்திற்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் போலீஸாருக்கு சிறப்பு பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றனவாம்.
சிவாஜிநகரில்தான் பெங்களூர் காவல்துறையினருக்கு சீருடைகள் தைப்பது வழக்கம். குறிப்பிட்ட டெய்லர்தான் தைத்துக் கொடுப்பாராம். அந்த டெய்லரிடமிருந்துதான் ஒரு வாரத்திற்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அணுகி, 10 சீருடைகளை வாங்கிச் சென்றுள்ளார்.
தற்போது மோடி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெறும் கூட்டத்தில் பேசவுள்ளதால், இந்த சீருடைகள் திருட்டு பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடைகளை வாங்கிச் சென்றவர் வயதானவர் என்றும் தன்னை வட இந்தியர் என்று கூறிக் கொண்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையை சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது மோடி வருகையின்போது எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் தீவிரமாக செயல்படுமாறு அவர் காவல்துறையினரைக் கேட்டுக் கொண்டாராம்.
இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர ஆரேத்கர் கூறுகையில், 10 சீருடைகளை ஒருவர் வாங்கிச் சென்றது உண்மைதான். இதுகுறித்துத் தகவல் வந்துள்ளது. விசாரித்து வருகிறோம் என்றார்.
சீருடைகள் மட்டுமல்லாமல், சிவாஜி நகரில் உள்ள ஒரு கடைக்குப் போனஅந்த முதியவர் போலீஸார் பயன்படுத்தும் தொப்பி, லத்தி ஆகியவற்றையும் வாங்கியுள்ளாராம். கான்ஸ்டபிள்கள் பயன்படுத்தும் தொப்பி இது என்றும்
தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெங்களூர் முழுவதும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications