"தீபாவளி பரிசு.."ஊழியர்களுக்கு டாடா பஞ்ச் காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்திய நிறுவனம்!
சண்டிகர்: தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்குக் காரை பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
நாடு முழுக்க தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கிறது. இப்போதே தீபாவளி சீசன் ஆரம்பித்துவிட்ட நிலையில், பொதுமக்கள் ஷாப்பிங் செய்யக் கடைகளில் படையெடுக்க ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர்.

இது ஒரு பக்கம் இருக்க சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு யாருமே எதிர்பார்க்காத பரிசுகளையும் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஹரியானாவில் நடந்துள்ளது.
கிப்ட்: ஹரியானா மாநிலத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஒருவர் தான் தனது ஊழியர்களுக்குத் தீபாவளி பரிசாக கார்களை வழங்கியுள்ளார். மிட்ஸ்கார்ட் என்ற இந்த நிறுவனத்தின் தலைவர் எம்.கே.பாட்டியா தனது அலுவலக உதவியாளர் உட்பட 12 ஊழியர்களுக்கு டாடா பஞ்ச் கார்களை பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தனது ஊழியர்களுக்கு எம்கே பாட்டியா கார் சாவியை வழங்கும் வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாட்டியா, "எனது ஊழியர்களின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் என்னை வியக்க வைப்பதாக இருக்கிறது. இதன் காரணமாகவே நான் அவர்களுக்குச் சிறப்புப் பரிசை கொடுக்க முடிவு செய்தேன். இவர்கள் தான் எங்கள் நிறுவனத்தின் உண்மையான ஸ்டார்கள். சிறப்பாக வேலை செய்யும் 12 ஊழியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கினேன். கடந்த மாதமே நான் கார்களை பரிசாகக் கொடுத்துவிட்டேன்.
கார் பரிசு: ஹரியானாவில் இயங்கும் இந்த மிட்ஸ்கார்ட் நிறுவனத்தைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாட்டியா தொடங்கினார். நிறுவனம் ஆரம்பித்தது முதலே தன்னுடன் பயணித்து வரும் ஊழியர்களுக்குத் தான் பாட்டியா இப்போது காரை பரிசாகக் கொடுத்துள்ளார். தனது ஊழியர்களின் விசுவாசம் மற்றும் கடின உழைப்பு காரணமாகவே தான் இந்தளவுக்கு உயர்ந்ததாகத் தெரிவித்த பாட்டியா, அவர்களை எப்போதும் மறக்க மாட்டேன் என்றும் நெகிழ்ச்சியாகப் பேசினார்.
இந்த ஊழியர்கள் நிறுவனத்திற்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதைக் காட்டவே அவர்களுக்குக் காரை பரிசளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். நிறுவனம் தொடங்கியது முதல் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது என்றும் கஷ்டமான நேரத்திலும் நிறுவனத்தின் வளர்ச்சியாகப் பாடுபட்டவர்கள் இவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
யாரும் எதிர்பார்க்கல: தங்கள் நிறுவனத்திடம் இருந்து இப்படியொரு கிப்டை அந்த ஊழியர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த பரிசு அவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது. காரை பரிசாகப் பெற்ற சிலருக்கு கார் ஓட்டுவது எப்படி என்றே தெரியாதாம். இருந்தாலும், அவர்களுக்குப் பரிசை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாட்டியா.
பாட்டியா தனது ஊழியர்களுக்கு டாடா பன்ச் காரை பரிசாகக் கொடுத்துள்ளார். அவர் துல்லியமாக எந்த வேரியண்டை பரிசாகக் கொடுத்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், டாடா பன்சின் ஆரம்ப விலை ரூ.6 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா பன்ச் கடந்த 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மைக்ரோ எஸ்யூவி மாடல் காராகும். பொதுமக்களிடையே நல்ல வரேற்பை பெற்றுள்ள டாடா பன்ச் கார், சமீபத்தில் குளோபல் கிராஷ் டெஸ்டில் கூட 5-ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications