60,000 ரூபாய் பரிசாமே.. தடுப்பூசி செலுத்தினால் போதும்.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட "அகமதாபாத்"
தடுப்பூசி போட்டுக் கொண்டால் சிறப்பு பரிசு வழங்குவதாக அகமதாபாத் அறிவித்துள்ளது
காந்திநகர்: தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபருக்கு 60000 ரூபாய் ரொக்கப் பரிசு என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது அகமதாபாத் மாநகராட்சி.
கொரோனா வைரஸ் பரவலை ஒழிக்க லட்சக்கணக்கான மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வருகிறார்கள்.. அதற்கான சிகிச்சை, மருந்துகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள்.
இப்போதைக்கு தடுப்பூசி மட்டுமே உலக நாடுகளுக்கு ஒரே ஒரு ஆறுதலாக இருந்து வருகிறது.. அந்த வகையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரட்டன், பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தடுப்பூசி
ஆனாலும், ஏராளமானோர் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள முன்வராத நிலையில், அந்தந்த நாடுகளின் சார்பில் ஏராளமான விழிப்புணர்கள் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.. நம் நாட்டிலும்கூட, இந்த தடுப்பூசி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அரசு சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.. பல விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
சலுகைகள்
அதேபோல தடுப்பூசி செலுத்தி கொண்டால், பல்வேறு சிறப்பு பரிசுகளையும், ஊக்க பரிசுகளையும் வழங்குகிறோம் என்றும் அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன... ஒரு சில மாநிலங்களில் போனஸும், சம்பளமும் தரப்படும் என்றும்கூட சொல்லப்பட்டது.. இதனால் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டுவதும் பெருகி வருகிறது என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் புது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பரிசு
அகமதாபாத்தில் இதுவரை 78.7 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்... அவர்களில் 47.7 லட்சம் பேர் முதல் டோஸ் 31 லட்சம் பேர் 2வது தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். இந்நிலையில், மேலும் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக, தடுப்பூசி போட்டுக்கொள்வோரில் ஒருவருக்கு மட்டும் 60,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்...
அறிவிப்பு
இன்று முதல் அதாவது டிசம்பர் 1ம் தேதிக்கும் டிசம்பர் 7ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே இந்த போட்டிக்கு தகுதியானவர்களாம்.. இவர்களில் குலுக்கல் முறையில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு 60,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அகமதாபாத் மாநகராட்சி அறிவித்துள்ளது.