புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் கோவா முதல்வர் பாரிக்கர்.. 4 மாதங்கள் கழித்து அலுவலகம் வருகை
பனாஜி: புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் 4 மாதங்கள் கழித்து முதன்முறையாக தமது அலுவலகம் வந்தார்.
63 வயதான மனோகர் பாரிக்கர் புற்றுநோயால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார். மும்பையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் ஒரு கட்டத்தில் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டி இருந்ததால் ஓய்வில் இருந்து வருகிறார். அதை காரணமாக கொண்டு கோவாவில் முதல்வரை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது.
இந் நிலையில், 4 மாதங்கள் கழித்து, புத்தாண்டு தினமான இன்று தமது அலுவலகத்துக்கு மனோகர் பாரிக்கர் வந்தார். தலைமை செயலகத்துக்கு காரில் வந்த பாரிக்கர் அதிலிருந்து இறங்கியவுடன் காத்திருந்த தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.
அவரை காண காத்திருந்த 100க்கான பாஜக தொண்டர்களும் காரில் இருந்து இறங்கிய மனோகர் பாரிக்கரை பார்த்து உற்சாக குரல் எழுப்பினர். பின்னர் தலைமை செயலகம் சென்ற மனோகர் பாரிக்கரை சபாநாயகர் பிரமோத் சவாந்த், அமைச்சர்கள் மவுவின் கோடிங்கோ, மிலிந்த் நாயக் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் பாரிக்கர் முக்கிய ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், காலியாக உள்ள அரசு பணியிடங்கள், பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது. தவிர அலுவலக ஊழியர்களை மனோகர் பாரிக்கர் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications