இந்த எக்ஸிட் போல் முடிவையா நம்புறீங்க? இது மீடியாக்கள் ஒரு மாசம் முன்பே எழுதிவச்சது: அகிலேஷ் யாதவ்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகள் உட்பட 543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகின்றன. ஜூன் 1ம் தேதி ஏழாவது கட்ட வாக்குப்பதிவைத் தொடர்ந்து, பல்வேறு சர்வே ஏஜென்சிகள் எக்சிட் போல் கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்பத் தொடங்கின.
இந்த கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக அரியணை ஏறுவார் என தெரிவிக்கின்றன. ஆனால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்துக் கணிப்புத் தரவுகளை விளாசித் தள்ளியுள்ளார்.

சமூக ஊடகப் பதிவில், அகிலேஷ் யாதவ் கருத்துக் கணிப்புகள் குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். கருத்துக் கணிப்புகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. தொண்டர் பலத்தை விட பெரிய சக்தி எதுவும் இல்லை. கருத்துக் கணிப்புகள் பொதுமக்களை ஏமாற்றுவதற்காக பாஜக ஊடகங்களால் சில மாதங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டன.
திங்கள்கிழமையன்று பங்குச் சந்தையை ஏற்றம் காண வைக்க செயற்கையாக கருத்து திணிப்பு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். மேலும், கருத்துக் கணிப்புகளை நம்பாமல் எதிர்க்கட்சிகள் முழு எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், பொதுமக்களின் கோபம் பாஜகவுக்கு எதிராக அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
எதிர்க் கட்சி கூட்டணி நிர்வாகிகள், EVMகளை விழிப்புடன் கண்காணித்து வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பின்னரே கொண்டாட தொடங்க வேண்டும் என்றும் அகிலேஷ் வலியுறுத்தினார்.

2022 உபி தேர்தலின் போது, பாஜகவின் தொடர்ச்சியான வெற்றியில் அரசு அதிகாரிகளின் முறைகேடு முக்கிய பங்கு வகித்ததாகவும், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகவும் அகிலேஷ் குற்றம் சாட்டினார். இப்போது, தேர்தல் கருத்துக்கணிப்பு தரவுகளையும் அரசு அதிகாரிகள் தவறாக ஊடகங்களுக்கு கொடுத்து கோல்மால் செய்துள்ளதாகவும் அகிலேஷ் கூறியுள்ளார்.உ.பி மற்றும் நாடு முழுவதும் பிஜேபி கணிசமான முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 62 முதல் 72 இடங்களையும், சமாஜ்வாதிக் கூட்டணி 8 முதல் 18 இடங்களையும் கைப்பற்றும் என பல சர்வேக்களால் கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications