எங்கள் அதிகாரி மீதான பலாத்கார குற்றச்சாட்டு பொய்யானது: சவுதி தூதரகம்
டெல்லி: டெல்லியில் வசித்து வரும் சவுதி தூதரக அதிகாரி மீதான பலாத்கார குற்றச்சாட்டு பொய்யானது என்றும், அது நிரூபிக்கப்படாதது என்றும் சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.
டெல்லி குர்காவ்னில் வசித்து வரும் சவுதி அரேபிய தூதரக அதிகாரி தனது வீட்டில் வேலை செய்த நேபாளத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. குர்காவ்ன் போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தி அந்த 2 பெண்களையும் மீட்டனர். தூதரக அதிகாரி தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தூதரக அதிகாரி இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளை இன்று சந்தித்து பேசினார். அப்போது குர்காவ்ன் போலீசார் தனது வீட்டில் அத்துமீறி சோதனை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையே டெல்லியில் உள்ள சவுதி தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எங்கள் தூதரக அதிகாரி மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்துள்ளதை கண்டிக்கிறோம். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது. மேலும் அது நிரூபிக்கப்படாதது. விசாரணை முழுமையாக முடிவதற்குள் இது குறித்து மீடியாவிடம் தெரிவித்தது பற்றி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.